3 மாநிலங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு: 87 பேர் பலி


3 மாநிலங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு: 87 பேர் பலி
x
தினத்தந்தி 10 Aug 2019 4:42 AM GMT (Updated: 10 Aug 2019 4:42 AM GMT)

கேரளா, மராட்டியம், கர்நாடகாவில் கடுமையான வெள்ள பாதிப்பு நிலவுகிறது.

திருவனந்தபுரம், 

கர்நாடகா, மராட்டியம், கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் அங்குள்ள பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தமிழகத்திலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.  கேரளா மற்றும் மராட்டிய மாநிலம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  

இந்த மாநிலங்களில் மழை, வெள்ளத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 86- ஐ எட்டி உள்ளது. கேரளாவில் வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் மிகக் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு குறைந்தபட்சம் 40 பேர் வரை சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வயநாடு பகுதியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு  இந்திய வானிலை மையம்  ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் கூடுதல் மீட்புப்படையினர் கேரளா அனுப்பப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 1.3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் புனேவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். கிருஷ்ணா, பஞ்சகங்கா ஆறுகளில் தொடர்ந்து வெள்ளநீரானது அபாய அளவை தாண்டி பாய்ந்து வருகிறது. கனமழை காரணமாக மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலை 4-வது நாளாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் பல மாவட்டங்கள் போக்குவரத்து இன்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கோலாப்பூர் பகுதியில் வீடுகள் மேம்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. 

Next Story