பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான் பேச்சு - இந்தியா திட்டவட்டம்


பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான் பேச்சு - இந்தியா திட்டவட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:12 AM GMT (Updated: 18 Aug 2019 10:36 PM GMT)

பாகிஸ்தானுடன் இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை பற்றி மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா திட்டவட்டமாக கூறி உள்ளது.

சண்டிகார்,

அரியானா மாநிலத்தில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலையொட்டி அங்கு முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் ‘ஜன ஆசீர்வாத் யாத்திரை’ என்ற பெயரில் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.

கல்கா என்ற இடத்தில் இந்த ‘ஜன ஆசீர்வாத் யாத்திரை’யை கொடியசைத்து தொடங்கி வைக்கும் வகையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபட குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை குறித்து மட்டும்தான். மற்ற விஷயங்கள் பற்றி பேச்சு கிடையாது.

பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், அது அந்த நாடு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதையும், உடந்தையாக இருப்பதையும் நிறுத்தும்போதுதான் நடக்கும்.

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தது, அண்டை நாட்டை (பாகிஸ்தானை) பலவீனப்படுத்தி உள்ளது. அது அவர்களை கவலைப்படவும் வைத்துள்ளது.

பாகிஸ்தான் ஒவ்வொரு நாட்டின் கதவையும் உதவிக் காக தட்டிக்கொண்டிருக்கிறது.

நாம் என்ன தவறு செய்துவிட்டோம்? நாம் ஏன் அச்சுறுத்தப்படுகிறோம்? எப்படி இருப்பினும், உலக வல்லரசு நாடான அமெரிக்கா, பாகிஸ்தானை துண்டித்துவிட்டது. இந்தியாவுடன் போய் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று சொல்லிவிட்டது.

ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை சீர்குலைக்கவும், பலவீனப்படுத்தவும் விரும்புகிறது.

சில நேரங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்தி நமது நாட்டை துண்டாடவும் விரும்புகிறது.

ஆனால் 56 அங்குல மார்பினை கொண்ட நமது பிரதமர், எப்படி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அந்த நாட்டுக்கு காட்டி இருக்கிறார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நமது விமானப்படை பாலகோட் தாக்குதலை நடத்திக்காட்டியது.

பாலகோட்டில் நமது விமானப்படை தாக்குதல் நடத்தியதை இதுவரை மறுத்து வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாலகோட் தாக்குதலை விட மிகப்பெரிய தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது என கூறி இருப்பதன் மூலம் பாலகோட் தாக்குதலை ஒப்புக்கொண்டுவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story