இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 20 Aug 2019 10:16 AM GMT (Updated: 20 Aug 2019 10:16 AM GMT)

நிலாவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-2 நுழைந்ததையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் -2,  இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்றது.  

இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ இஸ்ரோ குழுவினருக்கு எனது  வாழ்த்துக்கள். சந்திரனை நோக்கிய  பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நிலவின் சுற்றுவட்டப்பாதையை எட்டிய சந்திரயான்-2

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி ஏவப்பட்டது சந்திரயான்-2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட சந்திரயான்-2 முதலில் புவி வட்டப்பாதையில் வட்டமடித்தது.

அதன்பின் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, புவி வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு, நிலவின் வட்டப்பாதையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பயணம் இன்று காலை 9.30 மணியோடு நிறைவடைந்தது. அதன்படி புவியின் வட்டப்பாதையில் சுற்றிவந்த சந்திரயான்-2  தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையை வெற்றிகரமாக  எட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-2ன் பாதை திருத்தியமைக்கப்படும். செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு நிலவைக் குறைந்தபட்சம் 114 கிலோ மீட்டர், அதிகபட்சம் 128 கிலோ மீட்டர் என்கிற தூரத்தில் சுற்ற ஆரம்பித்தவுடன், ஆர்பிட்டரில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து நிலவின் தரைப் பகுதியை நோக்கிப் பயணிக்கும். செப்டம்பர் 7ந்தேதி நிலவில் இறங்கும். நிலவை ஆராயும் இந்தியாவின் முயற்சியில் சந்திரயான்-2 முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story