முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ்


முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ்
x
தினத்தந்தி 20 Aug 2019 6:31 PM GMT (Updated: 20 Aug 2019 6:42 PM GMT)

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு, சி.பி.ஐ அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2007-ம் ஆண்டு, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த வழக்கில்  கைது செய்யப்படாமல் இருக்க  முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு  மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இதன் மீதான உத்தரவை பிறப்பிக்காமல்  கடந்த ஜனவரி 25-ம் தேதி வழக்கை ஒத்திவைத்தது.

இந்த மனு மீதான வாதங்களின்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என இரண்டு அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன.

இந்த நிலையில், இன்று மேற்கூறிய வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட் , முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள், அமலாக்கத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.  

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் முகாமிட்டனர். ஆனால், ப. சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிபிஐ, அமலாக்கத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் ப. சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவரது வீட்டில் சி.பி.ஐ சார்பில் தற்போது நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Next Story