பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்வு: திருவள்ளூர், நாமக்கல் மாவட்டங்களுக்கு விருது - மத்திய மந்திரி வழங்கினார்


பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்வு: திருவள்ளூர், நாமக்கல் மாவட்டங்களுக்கு விருது - மத்திய மந்திரி வழங்கினார்
x
தினத்தந்தி 6 Sep 2019 11:54 PM GMT (Updated: 6 Sep 2019 11:54 PM GMT)

பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்ந்ததற்காக திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விருது வழங்கினார்.

புதுடெல்லி,

‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி அரியானாவில் தொடங்கி வைத்தார். முதலில் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பின்னர் 640 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை அதிகரித்தல் ஆகும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டங்களுக்கு நேற்று விருது வழங்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். நாடு முழுவதும் இருந்து 10 மாவட்டங்கள் விருது பெற தேர்ந்து எடுக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் இருந்து திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தன.

திருவள்ளூர் மாவட்டத்துக்கான விருதை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரும், நாமக்கல் மாவட்டத்துக்கான விருதை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியமும் பெற்றுக்கொண்டனர். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்ந்தது.


Next Story