கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை


கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
x
தினத்தந்தி 15 Oct 2019 2:40 AM GMT (Updated: 15 Oct 2019 2:40 AM GMT)

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.

இதுகுறித்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் ஆஜரானார்.

அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், அதாவது கடந்த செப்டம்பர் 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும்  டிகே சிவக்குமாரின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிகிறது. இதனால், இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.  இதற்கிடையில், டிகே சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



Next Story