நரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக செயல்பட்டால் 1+1 என்பது 11 ஆக இருக்கும்; பிரதமர் மோடி பேச்சு


நரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக செயல்பட்டால் 1+1 என்பது 11 ஆக இருக்கும்; பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 16 Oct 2019 1:17 PM GMT (Updated: 16 Oct 2019 1:22 PM GMT)

நரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக இணைந்து செயல்பட்டால் 1+1 என்பது 2 அல்ல 11 ஆக இருக்கும் என பிரதமர் மோடி மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் வருகிற 21ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  அதன் வாக்கு எண்ணிக்கை 24ந்தேதி நடைபெறும்.  தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  இதில் பிரதமர் மோடி பன்வேல் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு இன்று பேசினார்.

அவர் பேசும்பொழுது, கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திரா மற்றும் தேவேந்திரா ஆகிய இருவரின் பார்முலா சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.  மராட்டியம் வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லப்படும்.

நரேந்திரா மற்றும் தேவேந்திரா இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படும்பொழுது, 1+1 என்பது 2 அல்ல.  அது 11 ஆக இருக்கும் என கூறினார்.  டெல்லியில், நரேந்திராவை ஆட்சி அதிகாரத்திற்கு நீங்கள் கொண்டு வந்ததுபோன்று, மராட்டியத்தில் தேவேந்திராவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வாருங்கள்.

கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு வரை, ரியல் எஸ்டேட் துறையில் நிழலுலக மற்றும் மாபியா பில்டர்களுடன் இருந்த தொடர்பினால் ஏற்பட்ட கறைகளை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் துடைத்தெறிய முடியாது.

உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பு இன்று அதன் சிகரம் எட்டியுள்ளது.  இந்தியா இன்று மிக பெரிய சவால்களை சந்தித்து வருகிறது.  புதிய இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம்.  நாட்டை சிறந்த தேசம் ஆக்குவதற்காக மராட்டியம் பெருமளவில் பங்கு வகித்துள்ளது.  வங்கி கடன்கள் மீனவர்களுக்கு எளிதில் கிடைக்க உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களது படகுகள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன.  

கடல்வாழ் சூழியலை அழிக்க கூடிய ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தினை மீனவர்கள் நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கிடைக்க செய்வதற்கான திட்டம் அரசால் முன்பே தொடங்கப்பட்டு விட்டது.  வருகிற 2022ம் ஆண்டிற்குள் இந்த பணியை நிறைவு செய்ய பட்னாவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.  சேரிப்பகுதி மக்களுக்கு 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் பணிகள் பன்வேல் பகுதியில் நடந்து வருகின்றன என அவர் பேசியுள்ளார்.

Next Story