பிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு: பேசியது என்ன?


பிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு: பேசியது என்ன?
x
தினத்தந்தி 22 Oct 2019 11:30 PM GMT (Updated: 22 Oct 2019 9:58 PM GMT)

பிரதமர் மோடியை அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார். இருவரும் பேசியது என்ன என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமெரிக்க வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் கிரெமர் ஆகியோர் கூட்டாக வென்றனர்.

இவர்களில் அபிஜித் பானர்ஜி, கொல்கத்தாவில் பிறந்தவர்.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்த அபிஜித் பானர்ஜி, “இந்திய பொருளாதாரம் மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் வாங்கும் சக்தியை பெருக்கவும், தேவையை உருவாக்கவும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என கூறினார். இந்த கருத்தை பாரதீய ஜனதா கட்சி நிராகரித்தது. “அபிஜித் இடதுசார்பு உடையவர், அவரது கருத்தை மக்கள் நிராகரித்துவிட்டனர்” என அந்தக் கட்சியின் மூத்த தலைவரான பியூஸ் கோயல் குறிப்பிட்டார்.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அபிஜித் பானர்ஜியின் கருத்துகளை ஆதரித்தன.

இந்த நிலையில், இந்தியா வந்துள்ள அபிஜித் பானர்ஜி டெல்லி சென்றார். அவர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் அவர், “ நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியை சந்தித்தேன். இது சிறப்பானதொரு சந்திப்பு. மனித மேம்பாடு குறித்த அவரது பார்வை, தெளிவாக இருக்கிறது. நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆரோக்கியமான விதத்தில் விரிவாக பேசினோம். அவரது சாதனைகளில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என கூறி உள்ளார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அபிஜித் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், “ இந்திய பொருளாதாரம் குறித்து நீங்கள் கூறிய கருத்து விவாதப்பொருளாகி உள்ள நிலையில், பிரதமர் மோடியுடனான உங்கள் சந்திப்பு எப்படி அமைந்தது?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அபிஜித் பானர்ஜி பதில் அளித்து கூறிய தாவது:-

பிரதமர் மோடியுடனான சந்திப்பு நல்ல விதமாகவும், இணக்கமாகவும் இருந்தது. மோடி எதிர்ப்பு விஷயங்களை சொல்வதற்கு, ஊடகங்கள் எப்படி என்னை சிக்க வைக்க முயற்சிக்கின்றன என்பதை பிரதமர் மோடி வேடிக்கையாக கூறித்தான் பேசத்தொடங்கினார்.

அவர் டி.வி. பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்களையும் (ஊடகத்தினர்) அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்.

பிரதமர் மோடி எனக்கு கனிவுடன் கூடுதல் நேரம் ஒதுக்கித்தந்தார். இந்தியாவைப் பற்றிய அவரது சிந்தனை பற்றி நிறைய பேசினார். அது தனித்துவமானது.

ஆட்சியை அவர் பார்க்கும் விதம் குறித்து பேசினார். ஆட்சியின் மீது குறிப்பிட்ட வண்ணங்கள் பூசப்பட்டு அவநம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது; எனவே கட்டுப்பாடுள்ள நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதின்மூலம், நம்பிக்கையான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டியது இருக்கிறது என அவர் கூறினார்.

அதிகார வர்க்கத்தை இன்னும் பொறுப்புள்ளதாக்குவதற்கு ஏற்ற விதத்தில் நிர்வாகத்தில் செய்து வருகிற சீர்திருத்தம் பற்றி அருமையாக விளக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story