தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: “தனிமனித ரகசியம் காக்க முடியாத நிலை உள்ளது” - சுப்ரீம் கோர்ட்டு கருத்து


தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: “தனிமனித ரகசியம் காக்க முடியாத நிலை உள்ளது” - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 9:52 PM GMT)

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், தனிமனித ரகசியம் காக்க முடியாத நிலை உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சத்தீஷ்கார் மாநிலத்தில் பணிபுரியும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி முகேஷ் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த நாட்டில் என்ன நடக்கிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தனிமனித ரகசியத்தை காக்க முடியாத நிலை உள்ளது என்று கருத்து தெரிவித்தனர். அத்துடன், ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க உத்தரவிட்டது யார்? அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு சத்தீஷ்கார் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரிக்காக ஆஜராகும் வக்கீல் மீது வழக்கு பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அது தொடர்பான விசாரணைக்கு தடை விதித்தனர். மேலும் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாநில முதல்-மந்திரி புபேஷ் பாகலின் பெயரை இழுத்து இந்த பிரச்சினையை அரசியல் ஆக்கவேண்டாம் என்றும் ஐ.பி.எஸ். அதிகாரியின் சார்பில் ஆஜரான வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.


Next Story