காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்


காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
x
தினத்தந்தி 4 Nov 2019 11:30 PM GMT (Updated: 4 Nov 2019 10:05 PM GMT)

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து இருப்பது தொடர்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்து உள்ளது. அங்கு நிலவும் கடுமையான காற்று மாசு சீர்கேடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து நேற்று விசாரணை நடத்தியது.

விசாரணை தொடங்கியதும் சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் புரேலால், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் டெல்லியில் காற்று மாசு சீர்கேடு குறித்த விரிவான அறிக்கை ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது:-

காற்று மாசு காரணமாக டெல்லி நகரமே மூச்சடைத்துக் கிடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் பாதிப்பு உண்டாகிறது. நாகரிகம் அடைந்த நாட்டில் இது எப்படி சாத்தியமாகிறது? ஒரு மனிதனுக்கு வாழும் உரிமை மிகவும் முக்கியமானது. நம்முடைய காய்ந்த பயிர்களை எரித்து அடுத்தவர்களை சாகவிடுகிறோம்.

இதுபோன்று ஒரு நகரத்தில் காற்று மாசுடன் யாரும் வாழ முடியாது. மாநில அரசு இது தொடர்பாக சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அவர்கள் தங்கள் பொறுப்பை மத்திய அரசின் மீது சுமத்துகிறார்கள். இப்போது டெல்லி எந்த நிலையில் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.

டெல்லிக்கு வரும் மக்களை இப்போது வரவேண்டாம் என்று சொல்லும் நிலையில் இருக்கிறோம். இதற்கு யார் பொறுப்பு? மாநில அரசுகள்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். நாம் ஒவ்வொன்றையும் கேலிக்கூத்தாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்களிடம், “காய்ந்த பயிர் தட்டைகளை எரிப்பதை தடுப்பதற்கு தீர்வு என்ன? டெல்லி மட்டுமல்ல. உங்கள் மாநிலங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது” என்றார்.

நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், “முன்பு காய்ந்த சாணத்தை எரிப்பதற்கு தடை விதித்தோம். பிறகு என்ன நடந்தது? டயர்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு மேலும் அதிகரித்தது. ஏதாவது ஒரு இடுக்கில் நுழைந்து விதிமீறல்கள் நடைபெறுகிறது” என்றார்.

பின்னர் காற்று மாசை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அந்த அமைச்சகத்தின் தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த அதிகாரி ஒருவர், “பயிர் தட்டைகளை எரிப்பதை தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லியில் கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பயிர்களை எரிப்பவர்களை செயற்கைகோள் மூலம் கண்காணித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறினார்.

அதற்கு நீதிபதி அருண் மிஸ்ரா, “நாம் நம்முடைய அரிய உயிர்களை இழந்து வருகிறோம். முக்கியமான கேள்வி என்னவென்றால் இந்த பயிர் எரிப்பை அணைப்பதும், நிறுத்துவதும் எப்படி என்பதுதான்” என்றார்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் நட்கர்னி பதில் அளிக்கையில், “தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மேலும் யாரும் காய்ந்த பயிர்களுக்கு தீ மூட்டாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக அடுத்தவர்களை இப்படி கொல்லும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும், இப்படி அவர்கள் காய்ந்த பயிர்களை எரித்தால் அவர்கள் மீது நாங்கள் எந்த கருணையும் காட்ட மாட்டோம் என்றும் கூறினார்.

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதா நாராயண் கூறுகையில், “காய்ந்த பயிர் எரிப்பு முக்கியமாக நடைபெறும் அரியானா மற்றும் பஞ்சாபில் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். இதுபோன்ற ஒரு சூழலில் நாம் வெறுமனே எச்சரிக்கை மட்டும் விடுக்காமல் உரிய தடுப்பு நடவடிக்கையை உடனடியாக எடுத்தாக வேண்டும்” என்றார்.

டெல்லி நகரம் முழுவதும் தற்போது கட்டிட வேலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநில அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி அருண் மிஸ்ரா, டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதால் நீங்கள் சாதிப்பது என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், டீசல் பயன்பாடு குறைந்து இருப்பதாகவும், மேலும் மக்கள் வாகனங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் கூறினார்.

உடனே நீதிபதி அருண் மிஸ்ரா, “இதனால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? தனியார் வாகனங்களை தடுத்து நிறுத்துவீர்கள். ஆனால் ஆட்டோக்களும், வாடகை கார்களும், இரு சக்கர வாகனங்களும் சாலைகளில் அதிகமாக சென்று காற்று மாசை மேலும் அதிகரிக்கும்” என்று கூறினார்.

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் காய்ந்த பயிர்களை எரிப்பதால் 40 சதவீதமும், டெல்லியில் கட்டுமான பணிகள், இடிக்கும் பணிகள் மற்றும் குப்பைகளை எரிப்பதால் 60 சதவீதமும் காற்று மாசு ஏற்படுகிறது என்று டெல்லி அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “காய்ந்த பயிர்கள் மற்றும் குப்பைகளை எரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதை போலீஸ் மற்றும் உள்ளூர் நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும். காய்ந்த பயிர்களை எரிக்கும் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீது அந்த பொறுப்பை சுப்ரீம் கோர்ட்டு சுமத்தும்” என்று கூறினார்கள்.

பின்னர் நீதிபதிகள், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் புதன்கிழமை (நாளை) சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி, காய்ந்த பயிர் கழிவுகளை எரிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அத்துடன், டெல்லியில் கட்டிடங்களை இடிப்பது, கட்டுமான நடவடிக்கை ஆகிய அனைத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும், ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன கட்டுப்பாட்டினால் விளைந்த பயன்கள் குறித்து டெல்லி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கிடையே, டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெல்லி அரசின் தலைமைச் செயலாளர், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலாளர் ஆகியோருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.


Next Story