ப.சிதம்பரம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் - டெல்லி ஐகோர்ட்டில் கபில்சிபல் வாதம்


ப.சிதம்பரம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் - டெல்லி ஐகோர்ட்டில் கபில்சிபல் வாதம்
x
தினத்தந்தி 6 Nov 2019 9:30 PM GMT (Updated: 6 Nov 2019 8:53 PM GMT)

அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில் கூறினார்.

புதுடெல்லி,

மத்தியில் மன்மோகன் சிங் அரசில் நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எப்.ஐ.பி.பி.) அனுமதியை பெற்றுத்தந்தார் என புகார் எழுந்தது. இதில், அவர் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் சேர்ந்து லஞ்சம் வாங்கினார் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்தது. சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நடந்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்கு பதிவு செய்தது.

ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முதலில் சி.பி.ஐ. காவலிலும், பின்னர் டெல்லி திகார் சிறையில் அவர் நீதிமன்றக்காவலிலும் அடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் 16-ந் தேதி அவர் அமலாக்கப்பிரிவு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை வரும் 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே சி.பி.ஐ. வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு கடந்த மாதம் 22-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனாலும், அமலாக்கப்பிரிவு வழக்கில் அவர் தொடர்ந்து காவலில் இருப்பதால், வெளியே வர முடியவில்லை.

இந்த நிலையில், அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் வழங்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நீதிபதி சுரேஷ் குமார் கெயித் அமர்வில் நேற்று விசாரணை நடந்தது.

விசாரணை தொடங்கியதும் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், “அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் ப.சிதம்பரம் சாட்சியங்களை கலைக்க முயற்சித்ததாக ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இது மிகவும் தவறு. அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க நாங்கள் தயாராக உள்ளோம்., எனவே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடக்கிறது. இன்றைய விசாரணையின்போது, அமலாக்கப்பிரிவு வக்கீல் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க உள்ளார்.


Next Story