இம்ரான்கானுக்கு நன்றி: கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு


இம்ரான்கானுக்கு நன்றி: கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 9 Nov 2019 10:03 AM GMT (Updated: 9 Nov 2019 10:20 AM GMT)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

அமிர்தசரஸ், 

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது.

இந்த குருத்வாராவுக்கு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சீக்கியர்கள் சென்று வழிபாடு நடத்தி வர ஏதுவாக வழித்தடம் அமைக்க வேண்டும் என்று இந்தியா கோரி இப்போது அது செயல்வடிவத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் தேராபாபா நானக்கையும், பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. குர்தார்பூருக்கு விசா இன்றி சீக்கியர்கள் சென்று வர இந்த திட்டம் வழிவகுக்கிறது. இந்த வழித்தடத்தை இந்தியாவில் பிரதமர் மோடியும் , பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் தொடங்கி வைத்தனர்.

பின்னர் இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குருநானக்கின் 550-வது பிறந்த தினத்துக்கு முன்பாக இந்த வழித்தடம் திறக்கப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது” என்றார். 

Next Story