சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை


சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை
x
தினத்தந்தி 10 Nov 2019 4:02 PM GMT (Updated: 10 Nov 2019 9:58 PM GMT)

சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த கட்சி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்க தீர்மானித்து உள்ளது.

ஆனால் தாங்கள் ஆதரவு அளிக்கவேண்டுமானால், பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்து உள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசுகையில், “மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. (தெற்கு மும்பை தொகுதி சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் மத்திய மந்திரியாக இருக்கிறார்). நாங்கள் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்த வெளியேற வேண்டும். அதுவரை நாங்கள் காத்து இருப்போம்” என்று கூறினார். மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை விரும்பவில்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று (திங்கட்கிழமை) தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story