தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 11 Nov 2019 10:15 PM GMT (Updated: 11 Nov 2019 10:09 PM GMT)

தேர்தல் பிரசாரத்தின்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும்வகையில், கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், எட்வின் வில்சன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

தேர்தல் பிரசாரத்தின்போது, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கொடிகள், பேனர்கள், பிளெக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் முடிந்த பிறகு அவை கழிவுகளாக குவிந்துவிடுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

எனவே, தேர்தல் பிரசாரத்தின்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்க அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக செயலாளருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.

ஆகவே, தேர்தல் பிரசாரத்தின்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், மாநில அரசுகளுக்கும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு பசுமை தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டதால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், “தேர்தல் பிரசாரத்தின்போது, பிளாஸ்டிக்குக்கு பதிலாக, மட்கக்கூடிய பிளாஸ்டிக், இயற்கை துணி, மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் போன்ற மாற்றுப்பொருட்களை பயன்படுத்துமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடிதம் எழுதி இருக்கிறது“ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தேர்தல் பிரசாரத்தின்போது, குறிப்பாக, பேனர், விளம்பர பலகை போன்றவற்றில், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேர்தல் கமிஷனும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் எடுத்திருப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். ஆகவே, இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தேர்தல் கமிஷனும், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


Next Story