பெண்களுக்கான தடை நீங்குமா? தொடருமா? - சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு


பெண்களுக்கான தடை நீங்குமா? தொடருமா? - சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Nov 2019 11:15 PM GMT (Updated: 13 Nov 2019 10:53 PM GMT)

பெண்களுக்கான தடை நீங்குமா அல்லது தொடருமா என்பது குறித்து சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

சபரிமலை,

நூற்றாண்டு கால நம்பிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மறு உறுதி செய்யுமா அல்லது பிரதமர் மோடியின் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கொள்கையை முன்மொழியுமா? ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அளிக்கும் மற்றொரு மைல்கல் தீர்ப்பாக சபரிமலை கோவில் வழக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலை கோவிலுக்குள் செல்ல குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரிய வழக்கு மீது இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

2018 செப்டம்பரில், இந்தியாவின் அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 4:1 என்ற பெரும்பான்மையில், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் நுழையலாம் என்று தீர்ப்பளித்தது. இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

பிரதமர் மோடியின் எதிர்ப்பாளர்கள், கேரளா மற்றும் இதர தென் மாநிலங்களின் பெண் வாக்காளர்களை கவர பா.ஜ.க. செய்த தந்திரம் இது என்று கூச்சலிட்டனர்.

“இத்தகைய விலக்கி வைக்கும் நடைமுறை, கோவில்களுக்குள் சென்று இந்து மதத்தை சுதந்திரமாக கடைபிடிக்கவும், சுவாமி அய்யப்பனை வழிபடவும் பெண்களுக்கு உள்ள உரிமைகளை மறுக்கிறது என்பதை சொல்வதில் எங்களுக்கு தயக்கம் எதுவுமில்லை. பெண்களின் இந்த உரிமை மறுக்கப்படுவது, அவர்களின் வழிபாட்டு உரிமையை பெரிதும் பாதிக்கிறது.” பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது, கேரளா இந்து வழிப்பாட்டு தலங்கள் (அனுமதி வழங்கும் அதிகாரம்) சட்டம், 1965-ன் சட்டப் பிரிவு 25 (உட்பிரிவு 1) மற்றும் விதிமுறை 3(பி) ஆகியவற்றுக்கு முரண்பாடானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.

நீதிபதி இந்து மல்கோத்ரா, இதர நீதிபதிகளுடன் முரண்பட்டு, மத ரீதியான பழக்கவழக்கங்களுடன், பெண்களுக்கான சம உரிமையை தொடர்புபடுத்த முடியாது. மேலும் மத ரீதியான பழக்க வழக்கம் தொடர்பாக கோர்ட்டால் எந்த முடிவும் எடுக்க முடியாது. வழிபடுபவர்கள்தான் முடிவை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து பல போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சிகளும், தலைவர்களும் இதை விமர்சித்தனர். வன்முறை சம்பவங்கள் நடந்தன. சுமார் 3,500 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுவாமி அய்யப்பன் கோவில் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் அமைந்துள்ளது. சுவாமி அய்யப்பன் ஒரு நிரந்தர பிரம்மச்சாரி என்பதால், வரலாற்று பூர்வமாக, சபரிமலை கோவிலுக்குள், மாதவிடாய் ஏற்படும் வயதுடைய பெண்கள் நுழையத் தடை இருந்தது.

1991-ல் கேரள ஐகோர்ட்டு பெண்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதித்து, இதற்கு சட்டப்படியான அங்கீகாரத்தை அளித்தது.

இதை 2018 செப்டம்பரில் ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து வயது பெண்களும், பாலின வேறுபாடுகளின்றி சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. உடல் ரீதியான வித்தியாசங்களின் அடிப்படையில் பெண்கள் மீது விதிக்கப்படும் தடை, அரசியல் சட்டத்திற்கு முரணானது. இந்த தடை அரசியல் சட்டத்தில், சம உரிமைகளை அளிக்கும் சட்டப்பிரிவு 14 மற்றும் மதத்தை கடைபிடிக்கும் உரிமையை அளிக்கும் சட்டப்பிரிவு 25 ஆகியவற்றிற்கு முரண்பாடானது என்றது.

இந்த தீர்ப்பின் விளைவாக, போராட்டங்கள் வெடித்தன. பல பெண் செயல்பாட்டாளர்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றனர்.

சுவாமி அய்யப்பன் பிரம்மச்சாரியாக இருப்பதால், தனது தவத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால், கோவிலுக்குள் பெண்கள் நுழைய அவரே தடை விதித்ததாக நூற்றாண்டுகளாக உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் பெரும்பாலான பெண்கள் தன்னிச்சையாக கோவிலுக்கு செல்வதை தவிர்த்தனர் என்று தடையை ஆதரிப்பவர்கள் கருதுகின்றனர்.

மாதவிலக்கு என்பது அசுத்தமானது (அதனால் அந்த வயதுடைய பெண்களும் அசுத்தமானவர்கள்) என்ற பழங்கால நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு பிரிவினர் இந்த தடையை ஆதரிக்கின்றனர். அசுத்தமான நிலையில் இந்து கடவுளை சென்று வழிப்படுவது பாவம் என்று நம்புகின்றனர்.

கோவிலை பெண்கள் ‘அசுத்தப்படுத்தி’, 41 நாட்களுக்கு பிரம்மச்சாரிய விரதத்தை கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவர் என்று சிலர் கருதுகின்றனர்.

பெண்களை கோவிலுக்கு செல்ல அனுமதிப்பதினால், தவறான நடவடிக்கைகளுக்கு வகை செய்யும் என்றும், அந்த பகுதி, தாய்லாந்து போல ஒரு பாலியல் சுற்றுலா தலமாக மாறிவிடும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் பிரதிநிதி ஒருவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

ஒரு பக்தர் மற்றும் இரண்டு பெண்கள் குழுமத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் வாதாடிய சாய் தீபக், சுவாமியின் சிலை ஒரு மனிதராக இந்த வழக்கில் கருதப்பட்டு, அரசியல் சட்டத்தின் சட்டப்பிரிவு 21-ன் அடிப்படையில், அவருக்கு அந்தரங்க உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடினார். சுவாமி அய்யப்பனின் விருப்பப்படி, மாதவிடாய் ஏற்படும் வயதுடைய பெண்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றார்.

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பவர்கள், மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் நிகழ்வு என்றும், இதில் தவறோ, அசுத்தமோ ஏதுமில்லை என்கின்றனர். மாதவிடாய் என்பது ஒரு உடல்கூறு சம்பந்தபட்ட விஷயம் என்பதால், பாலியல் ரீதியாக இதன் அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று உறுதியாக கூறுகின்றனர்.

சடங்கு ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், மாதவிடாய் மாசுபாடு என்ற வாதத்திற்கு நியாயம் எதுவுமில்லை என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

சபரிமலை கோவில், ஆரம்ப காலங்களில், காட்டில் வசிப்பவர்கள் வழிபட்ட அய்யனார் என்ற பழங்குடி தெய்வத்தின் கோவிலாக இருந்ததாக அவர்களில் ஒருவர் கூறுகிறார். 15-ம் நூற்றாண்டில் இது சுவாமி அய்யப்பன் கோவிலாக மாறியதாக கூறுகிறார்.

மாதவிடாய் என்பது அசுத்தமானது என்ற பாரம்பரியமான இந்து புராண, மத நம்பிக்கைகள் போல் அல்லாமல், அது ஒரு புனிதமான, புத்திர ஸ்தானத்தை குறிக்கும் விஷயமாக பழங்குடியினர் கருதினர். 1960-கள் வரை அனைத்து வயதுடைய பெண்களுடன் கோவிலுக்கு வந்தனர். இந்த வரலாற்று அறிஞர்கள், 1980-கள் வரை இளம் சாதி பெண்கள் கோவிலுக்குள் சென்றதற்கு ஆதாரமாக ஆவணங்கள் உள்ளதாக கூறுகின்றனர்.



 





 நவீன வரலாறு

* திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களில் நடைபெற்ற ஆய்வுகள் பற்றி, இரு தொகுதிகளாக 1893 மற்றும் 1901-ல் அன்றைய மெட்ராஸ் அரசாங்கம் வெளியிட்ட நினைவுக்குறிப்புகளில், சபரிமலை கோவிலுக்குள், மாதவிடாய் ஏற்படும் வயதுடைய பெண்கள் நுழையத் தடை இருந்ததை பதிவு செய்கிறது. “வயதான பெண்கள் மற்றும் இளம் சிறுமிகள் கோவிலுக்கு செல்லலாம். ஆனால் பருவமடையும் வயதை எட்டிய பெண்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் நுழைய தடை” என்கிறது.

* சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வதை, 1991-ல் கேரளா ஐகோர்ட்டு தடை விதிக்கும் முன்பு, பல பெண்கள் கோவிலுக்கு சென்றுள்ளதை பற்றிய அதிகாரபூர்வமான மற்றும் அதிகாரபூர்வமற்ற பதிவுகள் உள்ளன.

* 1940-ல் திருவிதாங்கூர் மகாராணியும் கோவிலுக்கு சென்றதாக தகவல்கள் உள்ளன.

* சில சமயங்கள் பெண்கள், மதம் சம்பந்தப்படாத காரணங்களுக்காக (தங்களின் குழந்தைகளில் முதல் அரிசி ஊட்டும் சடங்கிற்காக) கோவிலுக்கு சென்றுள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

* 1986-ல் நம்பினார் கெடுவதில்லை என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பு, கோவிலின் படிக்கட்டுகளுக்கு அருகே நடைபெற்றபோது, அங்கு ஒரு நடனக் காட்சியில் பங்கு பெற்ற ஜெயஸ்ரீ, சுதா சந்திரன், அனு, வடிவுக்கரசி மற்றும் மனோரமா ஆகிய நடிகைகள் மற்றும் படத்தின் இயக்குனர் ஆகியோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

* இதற்கு அனுமதி அளித்ததற்காக, சபரிமலை கோவிலை நிர்வாகிக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்திற்கும் ரூ.7,500 அபராதம் விதிக்கப்பட்டது.

* கர்நாடகாவில் அமைச்சராக இருந்த பெண்மணி ஒருவர் 1986-ல், தனது 27-வது வயதில் சபரிமலை கோவிலுக்கு சென்றது மட்டுமல்லாமல், சுவாமி அய்யப்பனையை தொட்டு வணங்கியதாகவும் கூறியிருந்தார்.

* 1991-ல், ஒரு முன்னாள் தேவஸ்தான ஆணையரின் பேத்திக்கு அரிசி ஊட்டும் சடங்கில், பெண்கள் கலந்து கொண்டதை பற்றிய வழக்கில், 10 முதல் 50 வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் நுழைய கேரளா ஐகோர்ட்டு தடை விதித்தது.

* இத்தகைய தடையை (பெண்கள் நுழைவதற்கான தடை) தேவஸ்தானம் விதித்துள்ளது, இந்திய அரசியல் சட்டத்தின் 15, 25 மற்றும் 26-ம் பிரிவுகளுக்கு விரோதமாகாது என்று கேரளா ஐகோர்ட்டு கூறியது. இத்தகைய தடை, இந்து வழிப்பாட்டு தலங்கள் (அனுமதி வழங்கும் அதிகாரம்) சட்டம், 1965-க்கு முரண்பாடானது அல்ல. ஏனென்றால், இதில் பெண்களின் வர்க்கம், பிரிவுகள் அடிப்படையில் தடை விதிக்கப்படவில்லை. வயதின் அடிப்படையில் மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்குள் பெண்கள் நுழைவதை தடுக்க காவல் துறையினரை பயன்படுத்த கேரள அரசுக்கு கோர்ட்டு ஆணையிட்டது.

* 1995-ல், 42 வயதான மாவட்ட ஆட்சியர் வல்சலா குமாரி தான், முன் அனுமதி பெற்று, கோவிலுக்கு சட்டப்படி சென்ற முதல் பெண்மணி ஆவார். (ஆனால் அவர் கோவில் சன்னிதானத்திற்கு செல்லவில்லை). கோவிலின் நிலை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள, அதிகாரபூர்வமாக சென்றார்.

* 2006-ல், 10 முதல் 50 வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஆறு பெண் உறுப்பினர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இ ந்த தடை சட்ட உரிமையை மீறுவதாக கூறி, கேரளா இந்து வழிப்பாட்டு தலங்கள் (அனுமதி வழங்கும் அதிகாரம்) சட்டம், 1965-ன் சரித்தன்மையை கேள்விக்குள்ளாக்கினர்.

* ஜனவரி 2018-ல், சபரிமலை செல்ல விரும்பும் பெண் பக்தர்கள், தங்களின் வயது பற்றி நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சபரிமலை கோவில் நிர்வாகம் விதிமுறை வகுத்தது.

* 2018 செப்டம்பரில், இந்தியாவின் அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் நுழையலாம் என்று தீர்ப்பளித்தது.

சபரிமலை வரலாறு

* கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது

* சபரிமலை கோவிலின் தலைமை தெய்வமான அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி.

* மகிசாசூரி என்ற அரக்கியை அவர் தோற்கடித்த பின், அவள் ஒரு அழகிய இளம் பெண்ணாக (சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு பிறந்த ஒரு குழந்தையினால் தோற்கடிக்கப்படும் வரை ஒரு அரக்கியாக வாழுமாறு சபிக்கப்பட்ட) மாறினார்.

* சிவனுக்கு, மோகினிக்கும் (மகாவிஷ்ணுவின் ஒரு வடிவம்) பிறந்தவர் அய்யப்பன்.

* அந்த இளம்பெண், அய்யப்பனை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அதை அவர் மறுத்து, தான் ஒரு பிரம்மச்சாரியாக வாழ விதிக்கப்பட்டதாக கூறினார்.

* அந்த பெண் தொடர்ந்து வற்புறுத்தியபோது, சபரிமலையில் தன்னை கன்னி சாமிகள் (புதிய பக்தர்கள்) தரிசிக்க வருவதை நிறுத்தும்போது, அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் சபரிமலைக்கு ஆண்டு தோறும் கன்னிச்சாமிகள் வந்த வண்ணம் உள்ளதால், அந்த பெண்ணால் அய்யப்பனை திருமணம் செய்ய முடியவில்லை. அருகில் உள்ள கோவிலில், மாளிகைபுரத்து அம்மன் என்ற பெயரில் அவரை வழிபடுகின்றனர்.



Next Story