நிர்பயா வழக்கு: குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரை


நிர்பயா வழக்கு: குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரை
x
தினத்தந்தி 4 Dec 2019 5:27 PM GMT (Updated: 4 Dec 2019 5:27 PM GMT)

நிர்பயா வழக்கில், குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார்  கைது செய்தனர்.

விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 பேர்களும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின்  தூக்கு தண்டைனையை உறுதிசெய்தது. அதனையடுத்து அவர்கள் டெல்லி மாநில துணை ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர்.

இந்த சூழலில் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கு கருணை அளிக்கக் கூடாது என்று கவர்னருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதைத்தொடர்ந்து டெல்லி மாநில கவர்னர் அனில் பைஜால், நால்வரின் மீதான கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார். பின்னர் குற்றவாளிகள் நால்வரின் மனு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வினய் சர்மாவின் கருணை மனு குறித்த டெல்லி அரசின் பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் டெல்லி அரசின் இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து, அதன்பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பார்வைக்கு அனுப்ப உள்ளது. பின்னர் இதுதொடர்பான இறுதி முடிவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story