நிர்பயா வழக்கு குற்றவாளிகளை நான் தூக்கிலிட வேண்டும்; ரத்த கடிதம் எழுதிய வீராங்கனை


நிர்பயா வழக்கு குற்றவாளிகளை நான் தூக்கிலிட வேண்டும்; ரத்த கடிதம் எழுதிய வீராங்கனை
x
தினத்தந்தி 15 Dec 2019 6:02 AM GMT (Updated: 15 Dec 2019 6:02 AM GMT)

நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதி கோரி மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு துப்பாக்கி சுடும் வீராங்கனை தனது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.  மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள்  தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அதனையடுத்து, அவர்கள் டெல்லி மாநில துணை ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர்.

டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கு கருணை அளிக்க கூடாது என்று கவர்னருக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில், டெல்லி மாநில கவர்னர் அனில் பைஜால், நால்வரின் மீதான கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். தற்போது, குற்றவாளிகள் நால்வரின் மனு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், நிர்பயா கும்பல்-பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் பெண் ஒருவரை வைத்து மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அதில், இந்த குற்றவாளிகளை நான் தூக்கிலிட வேண்டும்.  இது நாடு முழுவதற்கும், மரண தண்டனையை பெண்ணாலும் செய்ய முடியும் என்ற தகவலை கொண்டு செல்லும்.  எனக்கு நடிகைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தரவேண்டும்.  இது சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story