குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் - பிரதமர் மோடி


குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 Jan 2020 5:36 AM GMT (Updated: 12 Jan 2020 5:36 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்து கொள்ள மறுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, கொல்கத்தாவின் ஹவுரா நகரின் பேளூர் மடத்திற்கு சென்று சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

கொல்கத்தாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

முன்னதாக நேற்று பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பேளூர் மடத்தில் நடந்த தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதன் பிறகு பேசிய போது, “குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நீங்கள் புரிந்து கொண்டதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இது பற்றி பல தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் மதசிறுபான்மையினர் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவ்வாறு அந்நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காகவே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிலர் வேண்டுமென்றே இதை புரிந்து கொள்ள மறுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்” என்று அவர் கூறினார்.

Next Story