பா.ஜனதா தலைவர்களை கொல்ல சதி: தேசத்துரோக வழக்கில் 6 பேர் கைது


பா.ஜனதா தலைவர்களை கொல்ல சதி: தேசத்துரோக வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2020 3:17 AM IST (Updated: 18 Jan 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பா.ஜனதா தலைவர்களை கொல்ல சதி செய்ததாக எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 6 பேர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி பெங்களூரு டவுன்ஹாலில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யாவும் பங்கேற்று இருந்தார். அதேபோல், இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் ஜே.பி. நகர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த வருண் (வயது 31) என்பவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது கலாசிபாளையம் அருகே ஒசபடாவனே, கும்பாரகுந்தி மெயின் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் வருணை வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதில், படுகாயம் அடைந்த வருண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக கலாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில், வருணை கொலை செய்ய முயன்றதாக ஆர்.டி.நகர் அருகே சாம்புராவை சேர்ந்த தையல் கடை நடத்தும் இர்பான் என்ற முகமது இர்பான் (33), சையத் அக்பர் (46), சனா என்ற சனாவுல்லா (28), லிங்கராஜபுரத்தை சேர்ந்த சையத் சித்திக் (30), கோவிந்தபுராவை சேர்ந்த அக்பர் பாட்ஷா (27), சிவாஜிநகரை சேர்ந்த சாதிக் (39) ஆகிய 6 பேரை கலாசிபாளையம் போலீசார் கைது செய்தனர். இவர்களில் சனா எலெக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த இவர்கள் 6 பேரும் டவுன்ஹாலில் நடந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் பா.ஜனதா எம்.பி. மற்றும் முக்கிய தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருந்தனர்.

ஆனால், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டதால் முக்கிய தலைவர்களையோ, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களையோ கைதான 6 பேரால் கொலை செய்ய முடியவில்லை.

கைதான 6 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவர்களை போலீஸ் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story