ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு: தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா வாக்குறுதி


ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு: தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா வாக்குறுதி
x
தினத்தந்தி 31 Jan 2020 2:40 PM GMT (Updated: 31 Jan 2020 9:38 PM GMT)

டெல்லியில் ஆட்சியை பிடித்தால், ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு வழங்கப்படும் என்று பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல், வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பிரகாஷ் ஜவடேகர், ஹர்ஷ வர்த்தன், கட்சியின் டெல்லி மாநில தலைவர் மனோஜ் திவாரி மற்றும் பா.ஜனதா எம்.பி.க்கள் முன்னிலையில், ‘டெல்லி சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய மான வாக்குறுதிகள் வருமாறு:-

டெல்லியில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தால், ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு நல்ல தரமான கோதுமை மாவு வழங்கப்படும்.

கல்லூரி மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர்கள், 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 58 வயதுவரை வேலை உத்தரவாதம் அளிக்கப்படும்.

மத்திய அரசின் ‘ஜல ஜீவன் மிஷன்’ திட்டத்தை போன்று, டெல்லியில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

டெல்லியில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் ‘கிசான் சம்மான் நிதி’ திட்டம் ஆகியவை செயல்படுத்தப் படும். வேலையில்லாத 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

10 புதிய கல்லூரிகளும், 200 புதிய பள்ளிகளும் தொடங்கப்படும். டெல்லி மாநில அரசின் இலவச திட்டங்கள் நீடிக்கும். அவற்றில் கூடுதல் தரத்தை சேர்ப்போம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, ‘16 வழிச்சாலை திட்டம், ஏப்ரல் மாதம் முடிவடையும். அதன்பிறகு, டெல்லி-மீரட் இடையிலான பயண நேரம் 45 நிமிடமாக குறையும். டெல்லியின் எதிர்காலத்தை மாற்றி அமைப்போம்” என்று கூறினார்.


Next Story