மகாத்மா காந்தி பற்றி தவறாக பேசவில்லை ; பாஜக எம்.பி அனந்தகுமார் ஹெக்டே

மகாத்மா காந்தி பற்றி நான் தவறாக பேசவில்லை என்று பாஜக எம்.பி அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மகாத்மா காந்தி பற்றி தவறாக எதுவும் பேசவில்லை என்று பாஜக எம்.பி அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பாஜக எம்.பி அனந்தகுமார் ஹெக்டே கூறியதாவது; நான் எந்த ஒரு அரசியல் கட்சி பற்றியோ அல்லது மகாத்மா காந்தி குறித்தோ தவறாக பேசவில்லை. சுதந்திர போராட்டத்தை வகைப்படுத்தவே நான் முயற்சித்து இருந்தேன்.
எனது பேச்சுக்கள் பொதுவெளியில் உள்ளன. யாராவது பார்க்க விரும்பினால், ஆன்லைனில் பார்க்கலாம். எனது இணையதள பக்கத்திலும் அந்த பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. மகாத்மா காந்தி பற்றியோ, நேரு பற்றியோ நான் ஒரு வார்த்தை கூட தவறாக கூறவில்லை. சுதந்திர போராட்டம் பற்றி மட்டுமே நான் விவாதித்தேன். ஊடக தகவல்கள் அனைத்தும் தவறானவை. தற்போது விவாதிக்கப்படுவது பற்றி நான் எதுவும் பேசவில்லை. இது ஒரு தேவையற்ற சர்ச்சையாகவே நான் பார்க்கிறேன்” என்றார்
அனந்த குமார் ஹெக்டே மீதான சர்ச்சை என்ன?
பெங்களூருவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அனந்த குமார் ஹெக்டே பேசியதாவது: சுதந்திர போராட்டத்தில் மூன்று வகையான குழுக்கள் இருந்தன. ஒரு குழுவினர் புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் ஆயுதங்களை கையில் எடுத்து போராடினர். மற்றொரு குழுவினர் சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு போராடினர். கடைசியில் இன்னொரு குழுவினர் உள்ளனர். அவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டு போராடினர்.
இந்த குழுவினர் நேர்மையான முறையில் சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களிடம் அடி உதை வாங்கவில்லை. ஆனால் அவர்கள் வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நமது நாட்டின் சுதந்திர போராட்டக்காரர்கள். பெங்களூரு இந்துத்துவா தலைநகராக மாற வேண்டும். இந்த உலகையே இந்துத்துவாவாக மாற்ற வேண்டும். சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்கள் தான் இந்துத்துவாவை எதிர்க்கிறார்கள். வரலாறு தெரியாத முட்டாள்கள் இந்த நாட்டில் உள்ளனர்” இவ்வாறு அவர் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
Related Tags :
Next Story