கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்ற டாக்டர் தற்கொலை: காதலியும் உயிரை மாய்த்த சோகம்


கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்ற டாக்டர் தற்கொலை: காதலியும் உயிரை மாய்த்த சோகம்
x
தினத்தந்தி 23 Feb 2020 9:30 PM GMT (Updated: 23 Feb 2020 8:33 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த டாக்டர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த கள்ளக்காதலியும் தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

சிக்கமகளூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் லட்சுமேஸ்வரா பகுதியில் வசித்து வந்தவர் ரேவந்த். பல் டாக்டரான இவர் பீரூரில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி கவிதா (வயது 31). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கவிதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இந்த கொலை சம்பவம் குறித்து கடூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கவிதாவின் பெற்றோர், தங்களது மகளை, ரேவந்த் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து கவிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் கத்தியால் கழுத்தை அறுக்கப்படுவதற்கு முன்பு, கவிதாவின் வயிற்றில் 2 மயக்க ஊசி போடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ரேவந்த்தும், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்த பேஷன் டிசைனரான ஹர்சிதா (32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் ரேவந்த், கவிதாவையும், ஹர்சிதா பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ் டிரைவராக இருக்கும் சுதீந்திராவையும் திருமணம் செய்து கொண்டனர். ஹர்சிதாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஹர்சிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுதீந்திரா தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் ரேவந்தும், ஹர்சிதாவும் பேசி பழகி வந்தனர். இது அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த கவிதா, ரேவந்த்தை கண்டித்து உள்ளார். ஆனாலும் ஹர்சிதாவுடனான கள்ளக் காதலை ரேவந்த் கைவிடவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கவிதாவை ரேவந்த் ஒரு நகைக்கடைக்கு அழைத்து சென்று அவருக்கு நகை வாங்கி கொடுத்து உள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது ஹர்சிதாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடும்படி ரேவந்திடம், கவிதா கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரேவந்த் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கவிதாவை தீர்த்து கட்டுவதற்காக, அவரது வயிற்றில் ஊசி போட்டு உள்ளார். மயக்கம் அடைந்த கவிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகளையும், 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். நகைக்காக மர்மநபர்கள் கவிதாவை கொலை செய்து இருப்பார்கள் என போலீசாரை நம்பவ வைக்க அவர் நாடகமாடியது தெரியவந்தது.

இதற்கிடையே போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த ரேவந்த் தலைமறைவானார். நேற்று முன்தினம் மாலை கடூரில் இருந்து அரிசிகெரே செல்லும் வழியில் பண்டிகொப்பலு என்ற கிராமத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ரேவந்த் பிணமாக கிடந்தார். அவர் உப்பள்ளியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ரேவந்த் தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த அவரது கள்ளக்காதலி ஹர்சிதா தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரேவந்த்- கவிதாவின் 2 குழந்தைகளும், ஹர்சிதாவின் குழந்தையும் தற்போது அனாதையாக நிற்கின்றன.

Next Story