இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 March 2020 4:37 AM GMT (Updated: 17 March 2020 7:35 AM GMT)

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.


புதுடெல்லி, 

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கேரளா மாநிலத்தில்தான் முதன்முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டது.  கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவரும், டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.  மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.  அதிகபட்சமாக  மராட்டியத்தில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Next Story