டெல்லியை திறந்து விடும் நேரம் வந்துவிட்டது;கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும்- கெஜ்ரிவால்


டெல்லியை திறந்து விடும் நேரம் வந்துவிட்டது;கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும்- கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 3 May 2020 3:42 PM GMT (Updated: 3 May 2020 3:42 PM GMT)

கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று மாலை காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியதாவது: `டெல்லியில் உள்ள 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை  மட்டுமே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு பரிந்துரை விடுப்போம். 

கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது வருவது சாத்தியமில்லாதது. ஏனெனில், நாடு முழுவதும் அப்படி ஒரு நிலை இல்லை. கொரோனா வைரசுடன் வாழ  தயாராக வேண்டும்.  டெல்லி முழுவதையும் சிவப்பு மண்டலமாக  மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதன் காரணமாக சந்தைகள், மால்களை திறக்க முடியாது.  

கடைகள் மூடப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை இழந்தவர்கள் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னும் பலர் இங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். நீண்ட நாள்களுக்கு டெல்லியால் இந்தப் பிரச்னையைத் தாங்க முடியாது.

இரண்டாவது காரணம், ஊரடங்கால் அரசால் எந்த வருவாயையும் ஈட்டமுடியவில்லை. நாங்கள் எப்படி சம்பளம் கொடுப்பது? அரசாங்கம் எப்படி செயல்படுவது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் குறைந்தது 3,500 கோடி வருவாய் ஈட்டுவோம். இந்தாண்டு 300 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளோம். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சம்பளம் கொடுக்க முடியாது.  

பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட அனுமதி கிடையாது.  அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் நாளை முதல் செயல்படும். ஆனால், விமானம், மெட்ரோ, பேருந்து போக்குவரத்து ரத்து நீடிக்கும்” என்றார். 

Next Story