இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்குகிறது: 25-ந்தேதி முதல் விமான போக்குவரத்து - மத்திய மந்திரி அறிவிப்பு


இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்குகிறது: 25-ந்தேதி முதல் விமான போக்குவரத்து - மத்திய மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 21 May 2020 12:15 AM GMT (Updated: 20 May 2020 11:09 PM GMT)

இந்தியாவில் வருகிற 25-ந்தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி அறிவித்து உள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று முன்தினம் அறிவித்து உள்ளார்.

4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை அறவே நிறுத்தப்பட்டது. ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன. இதைப்போல மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்வதற்காகவும் சில விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் பெரும்பாலான விமானங்கள், விமானநிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவ்வப்போது விமானங்களில் பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே ஊரடங்கு முடிவடைந்த பிறகுதான் விமான போக்குவரத்து தொடங்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து அதற்கு முன்பே, அதாவது வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “உள்நாட்டு சிவில் விமான போக்குவரத்து 25-ந்தேதி முதல் உரிய அளவீட்டு முறையில் மீண்டும் தொடங்கும். அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் அதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான இயக்கத்துக்கான நடைமுறைகள் தனித்தனியாக வழங்கப்படும்” என்று கூறி உள்ளார்.

Next Story