புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி இன்று பார்வையிடுகிறார்


புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி இன்று பார்வையிடுகிறார்
x
தினத்தந்தி 22 May 2020 12:59 AM GMT (Updated: 22 May 2020 12:59 AM GMT)

மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.

புதுடெல்லி, 

மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) விமானத்தில் பறந்தபடி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இருப்பதாக, டெல்லியில் நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. “பிரதமர் மோடி மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவாரா?” என்று கேட்டதற்கு தெளிவாக பதில் அளிக்காமல், “அவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார்” என்று மட்டும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story