கொரோனா எப்போது ஒழியும் என்று தெரியாத நிலையில் பொருளாதார வளர்ச்சியை கணிக்க முடியாது: நிர்மலா சீதாராமன் கருத்து


கொரோனா எப்போது ஒழியும் என்று தெரியாத நிலையில் பொருளாதார வளர்ச்சியை கணிக்க முடியாது: நிர்மலா சீதாராமன் கருத்து
x
தினத்தந்தி 23 May 2020 11:13 PM GMT (Updated: 23 May 2020 11:13 PM GMT)

கொரோனா நோய்த்தொற்று எப்போது ஒழியும் என்று தெரியாத நிலையில், பொருளாதார வளர்ச்சியை கணிக்க முடியாது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா நோய்க்கிருமியை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் 2 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், உற்பத்தி முடங்கி நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தொழில், விவசாயம், கட்டுமானம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.20 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கி அறிவித்த ரூ.8 லட்சத்து 1,000 கோடி மதிப்பிலான திட்டங்களும் அடங்கும். இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், எதிர்பார்க்கப்பட்டதை விட கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், 2020-2021-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்று தெரிவதாகவும் கூறினார்.

இந்தநிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான நளின் கோஹ்லியுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோய்க்கிருமி எப்போது ஒழியும் என்று தெளிவாக தெரியாத நிலை உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றிய சரியான கணிப்பை மேற்கொள்வது மிகவும் சிரமம். நான் இப்போது அதற்கான கதவுகளை மூடிவிடவில்லை. தொழில் துறையிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள், வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டவை போன்ற பல்வேறு அம்சங்கள் தொடர்பான விவரங்களை அறிய விரும்புகிறேன். இந்த நிதி ஆண்டில் 2 மாதங்கள்தான் முடிந்து இருக்கின்றன. இன்னும் 10 மாதங்கள் பாக்கி உள்ளன.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம். அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவதை மேலும் விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. ஊரடங்கு முடிந்த பின், தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து இந்திய நிறுவனங்கள் மீளும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி முடிவுக்கு வருவதை பொறுத்தே, எதிர்காலத்தில் பொருளாதார ஊக்குவிப்புக்கான நிதி கொள்கைகள், நடவடிக்கைகள் இருக்கும் என்று அவர் கூறினார்.

Next Story