லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்!


லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்!
x
தினத்தந்தி 2 Jun 2020 1:29 AM GMT (Updated: 2 Jun 2020 9:25 AM GMT)

லடாக் எல்லை பிரச்சினையில் பதற்றம் இன்னும் தணியாத சூழலில், இந்தியாவும், சீனாவும் ஏராளமான ஆயுதங்களை எல்லையில் குவிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

இந்திய- சீன இடையேயான எல்லை மோதல் போக்கு கடந்த 25 நாட்களுக்கு மேலாக நீடிக்கின்றன.

பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் காஷ்மீர் முதல் லடாக் எல்லை வரை இருநாட்டு படைகளும் ஆயுதங்களை குவிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய இராணுவமும் சீன இராணுவமும் பீரங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கிழக்கு லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அருகிலுள்ள தங்களது பகுதியில் குவித்து வருகின்றன.

இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. என்றாலும் பதற்றத்தை தணிப்பதற்கான தூதரக ரீதியில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீனா கூறி இருக்கிறது. இதேபோல் இந்திய தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பீரங்கி, காலாட்படை போர் வாகனங்கள் மற்றும் கனரக இராணுவ உபகரணங்களை சீன இராணுவம்  உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது கிழக்கு லடாக்கில் உள்ள தனது பகுதி அருகே குவித்து உள்ளது. 

இந்திய இராணுவம் கூடுதல் ராணுவ வீரர்களையும், பீரங்கிகள் போன்ற ஆயுதங்களை சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குவித்து வருகிறது.

சீன இராணுவம் பாங்கோங் த்சோ மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் சுமார் 2,500 ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளதாகவும், படிப்படியாக தற்காலிக உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதங்களை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

இந்திய மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்திய இராணுவத்தின் மதிப்பீடு என்னவென்றால், இந்தியா மீது அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட சீன சூழ்ச்சியை நாங்கள் நன்கு அறிவோம். இந்திய இராணுவம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது, இப்பகுதியில் நிலைமையை மீட்டெடுப்பதை விட குறைவான எதையும் நாங்கள்  எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

Next Story