எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்


எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்
x
தினத்தந்தி 22 Jun 2020 12:15 AM GMT (Updated: 21 Jun 2020 10:55 PM GMT)

எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவு திடீரென்று இந்திய-சீன படைகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டன. சீன வீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்கினார்கள். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த மோதல் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே எல்லை நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் கடந்த 16-ந் தேதி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து எல்லையில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. லடாக் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கணிசமான சுகோய் 30 எம்.கே.ஐ., ஜாகுவார், மிராஜ் 2000 போன்ற தாக்குதல் விமானங்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்களை லே, ஸ்ரீநகர் போன்ற முன்னணி படைத்தளங்களில் விமானப்படை தயார் நிலையில் வைத்து உள்ளது.

இந்த நிலையில் முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் நேற்று மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி பதாரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், லடாக்கில் தற்போது நிலவும் சூழல், முப்படைகளின் தயார் நிலை உள்ளிட்ட அம்சங்களை ராணுவ மந்திரி ஆய்வு செய்தார். பின்னர் சீனாவுடனான 3,500 கி.மீ. தரைவழி எல்லை மற்றும் வான் எல்லையில் சீனாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவம் மற்றும் விமானப்படைக்கு அறிவுறுத்தினார்.இதைப்போல கடல் வழியை பாதுகாக்க கடற்படையையும் கேட்டுக்கொண்டார்.

ராணுவத்துக்கு முழு சுதந்திரம்


மேலும் சீனாவின் எத்தகைய அத்துமீறலை எதிர்கொள்வதிலும் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுமாறு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக சீனா ஆக்கிரமிப்பு மனநிலையுடன் எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதனால் பாதுகாப்பு படையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “எல்லையில் நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுப்பதற்கு எங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இனிமேல் எங்கள் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும்“ என்று கூறினார். ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) ரஷியா செல்லும் நிலையில் முப்படை தளபதிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story