காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு மக்கள் விலை கொடுத்து வருகின்றனர்; வசுந்தராராஜே விமர்சனம்


காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு  மக்கள் விலை கொடுத்து வருகின்றனர்; வசுந்தராராஜே விமர்சனம்
x
தினத்தந்தி 18 July 2020 12:37 PM GMT (Updated: 18 July 2020 12:37 PM GMT)

காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு மக்கள் விலை கொடுத்து வருகின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் வசுந்தராராஜே விமர்சனம் செய்துள்ளார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் பிளவு ஏற்பட்டது. தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் தனியே முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவும் அசோக் கெலாட் அரசு முயற்சித்து வருகிறது. இதனால், ராஜஸ்தான் மாநில அரசியலில்  உச்ச கட்ட குழப்பம் நிலவுகிறது.

 ராஜஸ்தான் அரசியல் குழப்பம் பற்றி இதுவரை கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்த ராஜஸ்தான் பாஜகவின் முக்கிய தலைவரான வசுந்தராராஜே முதல் முறையாக காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார். வசுந்தராராஜே இது குறித்து கூறியிருப்பதாவது:- “ ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக மக்கள் விலை கொடுத்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 500 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் நிலத்தை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றம் உச்சத்தில் உள்ளது.  மாநிலம் முழுவதும் மின்சார பிரச்னை உள்ளது.

அவர்களின் பிரச்னையில் பா.ஜகவின் பெயரையும், பா.ஜக தலைவர்களின் பெயரையும் இழுத்துவிடுவதில் எந்த  பிரச்சினையும் இல்லை. ஆனால் மக்கள் நலனுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களை பற்றி நினைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story