கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல்கல்லை கடந்தது; ஒரே நாளில் 10 லட்சம் மாதிரிகள் சோதனை


கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல்கல்லை கடந்தது; ஒரே நாளில் 10 லட்சம் மாதிரிகள் சோதனை
x
தினத்தந்தி 22 Aug 2020 11:52 PM GMT (Updated: 22 Aug 2020 11:52 PM GMT)

கொரோனா பரிசோதனையில் இந்தியா புதிய மைல் கல்லை கடந்தது. ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் கூடுதலான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

உலக நாடுகளிலேயே அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்கிற முதல் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. கொரோனா பரிசோதனையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவத்தொடங்கியபோது கடந்த ஜனவரி மாதம் நாட்டில் ஒரே ஒரு பரிசோதனைக்கூடம் தான் இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக சுகாதார கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய பரிசோதனைக்கூடங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நாட்டில் அரசு துறையில் 983, தனியார் துறையில் 528 என மொத்தம் 1,511 பரிசோதனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு நாளில் 10 லட்சம் பரிசோதனைகள் என்ற இலக்கை நோக்கி நாட்டை மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் வழிநடத்தின.

அதன் பயனாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3.8 லட்சம் மாதிரிகள் துரித ஆன்டிஜன் பரிசோதனை முறையின் கீழ் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இந்தியா ஒரு நாளில் 10 லட்சம் மாதிரிகள் சோதனை என்ற இலக்கை எட்டியது. புதிய மைல் கல்லையும் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் தற்போது 3 கோடியே 44 லட்சத்து 91 ஆயிரத்து 73 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 28 சதவீத பரிசோதனைகள் துரித ஆன்டிஜன் பரிசோதனைகள் ஆகும்.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூறுகையில், “மத்திய, மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உறுதியான, கவனம் செலுத்திய, நிலையான, ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு சான்றுதான், 24 மணி நேரத்தில் 10 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பது. இதன்மூலம் ஒரு நாளில் 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை என்ற இலக்கு வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது” என தெரிவித்தது.

வெள்ளிக்கிழமையன்று 10 லட்சத்துக்கும் கூடுதலான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதின் விளைவாகத்தான் இந்தியாவில் முன்எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story