லடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை


லடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 21 Sep 2020 2:03 AM GMT (Updated: 21 Sep 2020 2:03 AM GMT)

எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

புதுடெல்லி, 

லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இதனால் அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.

அதே நேரம் அங்கு அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் மாஸ்கோவில் இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டது.

இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) லடாக் எல்லையில் சந்தித்து பேசுகிறார்கள். இருநாட்டு ராணுவ கமாண்டர் மட்டத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தை சீன பகுதியில் உள்ள மோல்டோவில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவை எட்டுவதற்காக, முதல் முறையாக இந்திய வெளியுறவுத்துறை இணை செயலாளர் மட்டத்திலான அதிகாரி ஒருவரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என தெரிகிறது. லடாக் மோதலுக்கு பின் இரு நாட்டு ராணுவ கமாண்டர் மட்டத்தில் நடைபெறும் 6-வது சந்திப்பு இதுவாகும்.

Next Story