மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு


மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 21 Sep 2020 6:53 AM GMT (Updated: 21 Sep 2020 6:53 AM GMT)

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின. 

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்து உள்ளனர். ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார்.  இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.  

இதைத்தொடர்ந்து  உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்தனர்.  சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு ஆதரவாக பிற எம் .பிக்களும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. 


Next Story