கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் விழிப்புணர்வு பிரசாரம் - மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு


கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் விழிப்புணர்வு பிரசாரம் - மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 7 Oct 2020 10:47 PM GMT (Updated: 7 Oct 2020 10:47 PM GMT)

கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் மத்திய அரசு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறது. மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

பிரதமர் மோடி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் தலைவராக எந்த இடைவெளியும் இன்றி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்காக, அவருக்கு மத்திய மந்திரிசபை வாழ்த்து தெரிவித்துக்கொண்டது. 20 ஆண்டு பணியில், குஜராத் மாநில முதல்-மந்திரியாக 13 ஆண்டுகள் இருந்துள்ளார். தனது பணிக்காலத்தில், சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி உள்ளார். கடைசி மனிதனுக்கும், வீடு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கச் செய்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 8-ந் தேதி (இன்று) முதல் இப்பிரசாரம் மேற்கொள்ளப்படும். தடுப்பூசி கிடைக்கும் வரை, பொதுமக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கிருமிநாசினியால் கழுவுதல் போன்றவற்றை பின்பற்றுவது அவசியம். இந்த 3 விதிகளை பின்பற்றுவது, கொரோனாவுக்கு எதிரான பெரிய தற்காப்பு நடவடிக்கைகள் ஆகும்.

இதை வலியுறுத்தி, பொது இடங்களிலும், மெட்ரோ ரெயில்கள், ஆட்டோ மற்றும் இதர பொது போக்குவரத்துகளிலும் சுவரொட்டிகள், பேனர்கள், ஸ்டிக்கர்கள் மூலம் பிரசாரம் செய்யப்படும். சமூக வலைத்தளங்களிலும் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும். குளிர்காலம் விரைவில் தொடங்குவதால், இந்த முன்னெச்சரிக்கை முறைகளை பின்பற்றுவது மிக முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பியூஸ் கோயல் கூறியதாவது:-

கொல்கத்தா மற்றும் புறநகர் பகுதிகளுக்காக கொல்கத்தா கிழக்கு மேற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட திட்ட செலவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அதன்படி, இறுதி திட்ட மதிப்பீடு ரூ.8 ஆயிரத்து 575 கோடி ஆகும். 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இயற்கை எரிவாயு விலையில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க நிலையான மின்னணு ஏல முறைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததாக பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் கூறினார். இதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story