பெண் மந்திரி பற்றி சர்ச்சை கருத்து: கமல்நாத் மீது காங். நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்


பெண் மந்திரி பற்றி சர்ச்சை கருத்து: கமல்நாத் மீது காங். நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Oct 2020 8:56 PM GMT (Updated: 19 Oct 2020 8:56 PM GMT)

பா.ஜனதா பெண் மந்திரி மீது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கமல்நாத் மீது சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கோரிக்கை விடுத்துள்ளார்.

போபால், 

மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருந்தவர் இமர்தி தேவி. இவர், ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர். கடந்த மார்ச் மாதம், கமல்நாத்துக்கு எதிராக ஜோதிர்ஆதித்ய சிந்தியா போர்க்கொடி உயர்த்தியபோது, அவருடைய ஆதரவாளர்களான இமர்தி தேவி உள்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுடன் சேர்ந்து பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

அதையடுத்து, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம் மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டபோது, இமர்தி தேவி மந்திரியாக பதவி ஏற்றார். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், குவாலியர் மாவட்டம் டாப்ரா (தனி) தொகுதியில் இமர்தி தேவி போட்டியிடுகிறார்.

நேற்றுமுன்தினம் அத்தொகுதியில் பிரசாரம் செய்த கமல்நாத், “இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எளிமையானவர். ஆனால், எதிர்த்து போட்டியிடுபவர் (இமர்தி தேவி) ஒரு ஐட்டம்” என்று பேசினார். அவரது கருத்து, பலத்த சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. கமல்நாத் பேச்சை கண்டித்து, ஆளும் பா.ஜனதா சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் 2 மணி நேர மவுன விரத போராட்டம் நடைபெற்றது. தலைநகர் போபாலில் உள்ள காந்தி சிலை முன்பு முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மற்றும் மந்திரிகள், பா.ஜனதா நிர்வாகிகள் மவுன விரதம் இருந்தனர்.அதுபோல், மாநில பா.ஜனதா தலைவர் விஷ்ணுதத் சர்மா குவாலியரிலும், ஜோதிர்ஆதித்ய சிந்தியா இந்தூரிலும் மவுன விரதம் இருந்தனர்.

போபாலில் மவுன விரதம் முடிந்த பிறகு, முதல்-மந்திரி சவுகான் பேசினார். அவர் பேசியதாவது:-

கமல்நாத், பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவமதித்து, வெட்கக்கேடான செயலை செய்துள்ளார். அதை நியாயப்படுத்தவும் செய்துள்ளார். ஒரு தடவை மட்டுமின்றி, 2 தடவை அந்த வார்த்தையை பொது மேடையில் பேசி உள்ளார்.ஒரு பெண்ணாகவும், தாயாகவும், மகளாகவும், சகோதரியாகவும் இருக்கும் சோனியா காந்தி, இதுபற்றிய தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அவருக்கு தனியாக கடிதம் எழுத உள்ளேன். கமல்நாத், மாநில காங்கிரஸ் தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவாரா என்று சோனியாவை கேட்க விரும்புகிறேன்” என்றார். 



Next Story