கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி


கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி
x
தினத்தந்தி 24 Oct 2020 11:07 PM GMT (Updated: 24 Oct 2020 11:07 PM GMT)

கேரளாவில் கொரோனா வைரசால் இறந்தவரின் இறுதி சடங்குக்கு முன் அவரை ஒரு முறை பார்க்க நெருங்கிய உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்படும் இறுதி சடங்குகளுக்கு என்று வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது.  இதன்படி, இறந்தவரின் உடலை தகனம் செய்யவோ அல்லது புதைப்பதோ மேற்கொள்ளப்படும்.

எனினும், கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மத சடங்குகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், கேரளாவில் சுகாதார மந்திரி சைலஜா கூறும்பொழுது, உயிரிழந்தவரின் நெருங்கிய சொந்தங்கள் கடைசியாக அவரது முகம் பார்க்க ஒரு முறை அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

இதன்படி, உடலை மூடிய பகுதியில் முகம் அருகே திறந்து உறவினர்களுக்கு ஒரு முறை பார்க்க அனுமதிக்கப்படும்.  பிற மத சடங்குகள், மந்திரங்கள் உள்ளிட்டவை சமூக இடைவெளியுடன் உடலை தொடாமல் மேற்கொள்ளப்படும்.  உடலை குளிக்க வைக்கவோ அல்லது முத்தமிடவோ கூடாது என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுகாதார துறை உத்தரவின்படி, இறுதி சடங்குகளில் கலந்து கொண்டவர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story