பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி


பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி
x
தினத்தந்தி 10 Nov 2020 9:59 PM GMT (Updated: 10 Nov 2020 11:51 PM GMT)

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 122 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.  பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும்,  பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன.

இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று(நவ.,11) காலை 3 மணி நிலவரப்படி, தே.ஜ., கூட்டணி, 122 தொகுதிகளில் வெற்றியும், 3 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான,122 இடங்களை இந்தக் கூட்டணி பெற்று வெற்றி பெற்றது. அதையடுத்து, நிதிஷ்குமார், மீண்டும் முதல்வராகிறார்.

இதில், பா.ஜ., 72 இடங்களில் வெற்றியும், 2 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. ஐக்கிய ஜனதா தளம், 42 இடங்களில் வென்றுள்ளது; 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது. விகாஷீல் இன்சான் கட்சி, நான்கு தொகுதிகளில் வென்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான, முன்னாள் முதல்வர், ஜிதன்ராம் மஞ்சியின், ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது; ஒன்றில் முன்னிலையில் உள்ளது.

மகாகட்பந்தன் கூட்டணி, 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர், லாலு பிரசாதின் மகனான, தேஜஸ்வி யாதவின் தலைமையிலான, ராஷ்ட்ரீய ஜனதா தளம், 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மகாகட்பந்தன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கவில்லை. காங்கிரஸ், 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளளது.

Next Story