நிதி பகிர்வு இறுதி அறிக்கையை பிரதமர் மோடியிடம் வழங்கிய 15-வது நிதி குழு


நிதி பகிர்வு இறுதி அறிக்கையை பிரதமர் மோடியிடம் வழங்கிய 15-வது நிதி குழு
x
தினத்தந்தி 16 Nov 2020 7:35 PM GMT (Updated: 16 Nov 2020 7:35 PM GMT)

நாட்டின் 15-வது நிதி குழு 5 ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையை பிரதமர் மோடியிடம் இன்று வழங்கியது.

புதுடெல்லி,

நாட்டின் 15-வது நிதி குழு அதன் தலைவர் என்.கே. சிங் தலைமையில் செயல்பட்டு வருகிறது.  மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது பற்றி இந்த குழு பரிந்துரைகளை வழங்கும்.

இந்நிலையில் 15வது நிதி குழு, 2020-21ம் ஆண்டுக்கு மத்திய வரியில் 41 சதவீதம் அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.  இதுபோக ஒரு சதவீதம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் நிதி பகிர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

எனினும், சமீப ஆண்டுகளில் நிதி குழு பரிந்துரைக்கு குறைவாகவே மாநிலங்களுக்கு நிதி பகிர்வு இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காலத்தில் நிதி குழு என்ற பெயரிலான 4 தொகுப்புகளை கொண்ட இறுதி அறிக்கையின் நகலை பிரதமர் மோடியிடம் நிதி குழு இன்று வழங்கியது.  இதன் முதல் அறிக்கையானது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கடந்த 9ந்தேதி வழங்கப்பட்டது.  இதேபோன்று மற்றொரு நகல் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நாளை வழங்கப்படும்.

இந்த நிதி பகிர்வு பற்றிய அறிக்கை நாடாளுமன்ற அவையில் நிதி மந்திரியால் முன்வைக்கப்படும்.  அதனுடன், அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும்.

இந்த நிலையில், என்.கே. சிங் தலைமையிலான நிதி ஆணையம் தயாரித்த, வருகிற 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டுகள் வரையிலான 5 ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையின் நகலை நிதி குழுவிடம் இருந்து பிரதமர் மோடி இன்று பெற்று கொண்டார்.

Next Story