விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2020 11:46 AM GMT (Updated: 13 Dec 2020 11:46 AM GMT)

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் வேளாண்சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில், “"விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். ஆம் ஆத்மி தன்னார்வலர்களை இதில் சேருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும், மேலும் எம்எஸ்பிக்கு (குறைந்தபட்ச ஆதரவு விலை) உத்தரவாதம் அளிக்கும் மசோதாவைக் கொண்டு வர வேண்டும்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவளிக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் ஒற்றுமையைக் காட்ட ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த புதிய சட்டங்கள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். அவை லாபத்தையும், பதுக்கலையும் உருவாக்குகின்றன. அவை விலைகள் உயர உதவுகின்றன” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார் .



Next Story