ராகுல் காந்தி திருமணமாகாதவர், ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார் - முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு


ராகுல் காந்தி திருமணமாகாதவர்,  ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார் - முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 30 March 2021 8:06 AM GMT (Updated: 30 March 2021 8:06 AM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.


திருவனந்தபுரம்

கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி நடந்து வருகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி குறித்து இடுக்கி முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகியுமான ஜாய்ஸ் ஜார்ஜ் பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது.

கடந்த வாரம் ராகுல் காந்தி, கொச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கே சென்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அந்தச் சம்பவத்தை  ஜார்ஜ் விமர்சித்துள்ளார்.கொச்சியில் உள்ள புகழ்பெற்ற தெரஸா மகளிர் கல்லூரிக்குக் கடந்த வாரம் ராகுல் காந்தி சென்றிருந்தார். அங்குள்ள மாணவிகள் கோரிக்கையை ஏற்று தான் பயின்ற அகிடோ கலையைக் கற்றுக்கொடுத்தார். இதைக் குறிப்பிட்டு ஜார்ஜ் பேசியுள்ளார்.

இடுக்கி மாவட்டம் இரட்டையார் பகுதியில் மின்துறை அமைச்சர் மாணிக்கு ஆதரவாக ஜாய்ஸ் ஜார்ஜ் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தி ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார். பெண்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுக்கிறேன் என்று கூறி நேராக நில்லுங்கள், குனிந்து, வளைந்து நில்லுங்கள் என்று பெண்கள் அருகே ராகுல் செல்கிறார். பெண்கள் அருகே ராகுல் காந்தி செல்லக்கூடாது. இதுபோன்றும் செய்யக்கூடாது. ராகுல் காந்தியுடன் பேசும்போது பெண்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி திருமணமாகாதவர், சிக்கலை உருவாக்கக்கூடியவர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ராகுல் காந்தி குறித்துத் தரக்குறைவாகப் பேசியது குறித்து காசர்கோட்டில் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், "இடதுசாரி ஜனநாயக முன்னணியின் கருத்து அல்ல. இந்தக் கூட்டணி ராகுல் காந்தியைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. அரசியல் ரீதியாகத்தான் விமர்சிப்போம். இது ஜார்ஜின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

Next Story