கொரோனா பரவல் எதிரொலி: மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் நாளை ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 April 2021 12:52 PM GMT (Updated: 8 April 2021 12:52 PM GMT)

கொரோனா பரவல் எதிரொலியால், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. 

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 685 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நாட்டின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் நாளை (ஏப்ரல் 9-ம் தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா மீண்டும் பரவி வருவதைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் உயர்நிலை அமைச்சர்கள் குழுவின் 24-வது கூட்டத்திற்கு மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்க உள்ளார்.

Next Story