இந்தியாவில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,689 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 May 2021 4:23 AM GMT (Updated: 2 May 2021 4:23 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. கடந்த 22-ந்தேதி தொடங்கி 9 நாட்கள் தொடர்ந்து தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று, இந்தியாவில் தாக்கி வந்தது. இந்த சூழலில் நேற்றைய கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி பதிவாகி இருந்தது. 

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,92,488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 57 ஆயிரத்து 457 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் 3,689 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,15,542 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 07 ஆயிரத்து 865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 271 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 33,49,644 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியே 68 லட்சத்து 16 ஆயிரத்து 031 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.  

கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 29 கோடியே 01 லட்சத்து 42 ஆயிரத்து 339 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 18,04,954 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Next Story