புதுச்சேரியில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 18 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 May 2021 8:49 AM GMT (Updated: 5 May 2021 8:49 AM GMT)

புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை

இந்நிலையில், புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் 6,893 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 1,435 பேருக்கும், காரைக்காலில் 182 பேருக்கும், ஏனாமில் 180 பேருக்கும், மாஹேவில் 22 பேருக்கும் என, மொத்தம் 1,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், புதுச்சேரியில் 17 பேர், ஏனாமில் ஒருவர் என, மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 10 ஆண்கள், 8 பெண்கள் அடங்குவர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 883 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.36 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 65 ஆயிரத்து 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 389 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 307 பேரும், கோவிட் கேர் சென்டரில் 841 பேரும் என, புதுச்சேரியில் 1,537 பேரும், காரைக்காலில் 75 பேரும், ஏனாமில் 320 பேரும், மாஹேவில் 40 பேரும் என, மாநிலம் முழுவதும் 1,972 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், புதுச்சேரியில் 7,703 பேரும், காரைக்காலில் 1,029 பேரும், ஏனாமில் 675 பேரும், மாஹேவில் 338 பேரும் என, 9,745 பேர் என, மாநிலம் முழுவதும் மொத்தமாக 11 ஆயிரத்து 717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 933 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 517 (80.65 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8 லட்சத்து 25 ஆயிரத்து 30 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 7 லட்சத்து 52 ஆயிரத்து 684 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 2 லட்சத்து 6,099 பேருக்கு (2 தவணை) தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story