தேர்தல் கமிஷன் குறித்து சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தேர்தல் கமிஷன் குறித்து சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகளை செய்தியாக்குவதை தடைவிதிக்க கோரிய மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையமே காரணம்கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக் கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகள் இஷ்டம்போல் பிரசாரம் செய்ததே தொற்று பரவலுக்கான காரணம். தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை,
மே 2 வாக்கு எண்ணிக்கை நாளில் உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என வாய்மொழியாக எச்சரித்தனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா சூழலை கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை ஐகோர்ட்டு முடித்து வைத்தது. இதனிடையே, தேர்தல் ஆணையம் குறித்து சென்னை ஐகோர்ட்டு வாய்மொழியாக தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, தீர்ப்பை கடந்த 3-ந்தேதி ஒத்திவைத்தது.
இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-
செய்தியாக்க தடை விதிக்க முடியாது* வழக்குகள் விசாரணையின்போது நீதிபதிகளின் கருத்துகளை செய்தியாக்குவதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது.
* பேச்சுரிமை, கருத்துரிமை நீதிசார் விவகாரங்களுக்கும் பொருந்தும்.
* கோர்ட்டுகளில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை செய்தியாக்க ஊடகங்களுக்கு உரிமையுண்டு.
* விசாரணையின்போது நீதிபதிகளின் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்று சொல்வதும், அவற்றை செய்தியாக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு தடைவிதிப்பதும் பிற்போக்குத்தனமாக அமைந்துவிடும்.
* வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கோர்ட்டுகளும் இருக்க வேண்டும். கோர்ட்டில் நடைபெறும் விசாரணைகளை செய்தியாக்கக் கூடாது என தடை விதிப்பது சரியாக இருக்காது.
கருத்துகளை நீக்க முடியாது* தேர்தல் கமிஷன் குறித்து சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகள் கடுமையானவை, அது தெரிவித்த உருவகம் பொருத்தமற்றவை. இருப்பினும் அவை உத்தரவில் இடம்பெறவில்லை என்பதால் நீக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை.
* கொரோனா காலத்தில் அது தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதில் ஐகோர்ட்டுகளின் பணி பாராட்டும் வகையில் உள்ளது.
* இதன்படி தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.