ஆபாச சி.டி. விவகாரம்: விசாரணை அறிக்கையை வரும் 17ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு


ஆபாச சி.டி. விவகாரம்:  விசாரணை அறிக்கையை வரும் 17ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 1 Jun 2021 7:11 AM GMT (Updated: 1 Jun 2021 7:11 AM GMT)

கர்நாடக முன்னாள் மந்திரி ஆபாச சி.டி. விவகாரத்தில் விசாரணை அறிக்கையை வரும் 17ந்தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மார்ச் மாதம் 2ந்தேதி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதுதொடா்பாக ரமேஷ் ஜார்கிகோளி மீது பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவாகி உள்ளது. இந்த ஆபாச வீடியோ விவகாரம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த இளம்பெண்ணுக்கு அரசு துறையில் வேலை வாங்கி தரப்படும் என்ற உறுதிமொழியை அடுத்து, குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டு உள்ளார்.  அதன்பின்னர் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.  இதன்பின்னர் அவரை மந்திரி மற்றும் அவரது சகாக்கள் மிரட்டி வருகின்றனர் என போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நன்றாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதனால், சி.பி.ஐ. விசாரணை தற்போதைக்கு தேவை இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கில் ஆபாச வீடியோவில் இருந்ததாக கூறப்படும் இளம்பெண்ணிடம் பலமுறை போலீசார் விசாரித்து இருந்தனர்.  இந்நிலையில், முன்னாள் மாநில மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை அறிக்கையை வருகிற 17ந்தேதிக்குள் ஒப்படைக்கும்படி சிறப்பு புலனாய்வு குழுவிடம் கர்நாடக ஐகோர்ட்டு கேட்டு கொண்டுள்ளது.


Next Story