மராட்டியம்: கொரோனாவால் உயிரிழந்த 1,300 பேரின் உடல்களை தகனம் செய்த தன்னார்வலர் கொரோனாவுக்கு பலி

மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்த 1,300 பேரின் உடல்களை தகனம் செய்த தன்னார்வலர் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
மும்பை,
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் பணியில் பல தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்து குடும்பத்தினரால் கைவிடப்பட்டு அல்லது கொரோனா அச்சம் காரணமாக இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் செய்யாமல் கைவிடப்படும் உடல்களை வாங்கி உரிய முறையில் இறுதிச்சடங்கு பணிகளை மேற்கொண்டு உடலை தகனம் செய்யும் நடவடிக்கையில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த சந்தன் நிம்ஜி என்ற 67 வயதனான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தன்னார்வலர் குழுவின் இணைந்தார். அந்த குழு மூலம் கொரோனாவா உயிரிழந்த ஆதரவற்றோர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களின் உடல்களை உரிய மரியாதையும் இறுதிச்சடங்கு மற்றும் தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். சந்தன் நிம்ஜி இதுவரை 1,300 கொரோனா நோயாளிகளை தகனம் செய்துள்ளார். இதனால், இவரை ’கொரோனா வாரியர்’ என அழைத்தனர்.
இந்நிலையில், சந்தன் நிம்ஜிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அவரது குடும்பத்தினர் முயற்சித்தனர். ஆனால், அரசு மருத்துவமனையில் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சந்தன் நிம்ஜி நேற்று உயிரிழந்தார்.
கொரோனாவால் உயிரிழந்த 1,300 பேரை தகனம் செய்த தன்னார்வலர் சந்தன் நிம்ஜி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அவர் இடம்பெற்ற தன்னார்வலர் குழுவினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story