கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பை மாதிரியை பின்பற்ற டெல்லி மாநில அரசு முடிவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பை மாதிரியை பின்பற்ற டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
மும்பையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு நகரில் பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில் மும்பையில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் வார்டு கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள், ஆக்சிஜன் சப்ளை, குறுகிய காலத்தில் ஜம்போ ஆஸ்பத்திரி அமைத்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் அவர்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை, கோரேகாவ், செவன்ஹில்ஸ் ஜம்போ சிகிச்சை மையங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு டெல்லி மாநில சுகாதாரத்துறை கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டி உள்ளனர்.
மேலும் நகரில் நோய் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ‘மும்பை மாடல்' டெல்லியில் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.
இந்த தகவலை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story