மத்திய பிரதேசம்: போபாலில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு


மத்திய பிரதேசம்: போபாலில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 11:17 PM IST (Updated: 17 Jun 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசம் போபாலில் நோயை உண்டாக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபால்,

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் தணிந்து வருகிறது. தொடர்ந்து 10-வது நாளாக தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழே பதிவாகி வருகிறது.

இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தது. 67 ஆயிரத்து 208 பேர் புதிதாக கொரோனா தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

அத்துடன், இதுவரை இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 313 ஆக உயர்ந்தது. நாட்டில் தினசரி பாதிப்பு விகிதம் 3.48 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 3.99 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.

இதற்கிடையே உருமாறிய கொரோனா வைரஸ் முளைத்துக் கொண்டிருக்கிறது. எளிதில் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸானது உருமாறி 'டெல்டா பிளஸ்' அல்லது 'ஏ.ஒய் 1' வகையை உருவாக்குவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

இருப்பினும் அவை இன்னும் கவலை தரும் விஷயமில்லை என்றது.  மராட்டிய அரசு 'டெல்டா பிளஸ்' மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப் படி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ‘கோவிட்-19’ நோயை உண்டாக்கும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவக் கல்வி மந்திரி விஸ்வாஸ் சாரங் தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்த வகை வைரஸின் பரவலை தடுக்க, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது என அம்மாநில மருத்துவக் கல்வித்துறை மந்திரி தெரிவித்தார். புதிய வகை பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

‘டெல்டா பிளஸ்’  என்ற உருமாறிய வைரஸ் மாநிலத்தில் மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மராட்டிய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. 

Next Story