கர்நாடகாவில் இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jun 2021 8:41 PM GMT (Updated: 20 Jun 2021 8:41 PM GMT)

55 நாட்களுக்கு பிறகு கர்நாடகாவில் இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயங்குகிறது.

பெங்களூரு, 

கர்நாடகாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அரசு-தனியார் பஸ் போக்குவரத்து, பெங்களூருவில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து கர்நாடக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது.

முதல் முறையாக கடந்த 14-ந் தேதி முதல் தளர்வு அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 2-வது தளர்வு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அந்த தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அனைத்து வகையான தனியார் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மளிகை, காய்கறி, பழக்கடைகள், இறைச்சி கடைகளை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிக்கு பதிலாக காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு-தனியார் பஸ்கள், மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 55 நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசு பஸ்களின் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.

பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story