உத்தரகாண்ட் மாநில புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி தேர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 July 2021 10:59 AM GMT (Updated: 3 July 2021 10:59 AM GMT)

தீரத் சிங் ராவத் நேற்று ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டோராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பாஜகவை சேர்ந்த  தீரத் சிங் ராவத் பதவி வகித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் தீரத் சிங் ராவத் முதல்வராக பொறுப்பேற்றார்.  அடுத்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் வந்துள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் உறுதி செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதையடுத்து, புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு பார்வையாளராக கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். புஷ்கர் சிங் தற்போது கட்டிமா தொகுதியில் இருந்து இரண்டாவது முறை எம்எல்ஏவாக தேர்வானவர் ஆவார். உத்தரகாண்ட முன்னாள் முதல்-மந்திரி பகத் சிங் கோஷியாரிடம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். 

முன்னதாக முதல்-மந்திரி பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் புதிய முதல்-மந்திரியாக சத்யபால் மகாராஜ் அல்லது தன் சிங் ராவத் பெயர்கள் தீவிர பரிசீலனையில் இருந்தன. ஆனால் புஷ்கர் சிங்கை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி விரைவில் பதவியேற்க உள்ளார்.

Next Story